ஏலகிரி மலையில் 3 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

ஏலகிரி மலையில் தனியார் பங்களாவில் 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-09 16:41 GMT
ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் தனியார் பங்களாவில் 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பங்களா 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர். 

மேலும் இங்கு பல்வேறு தரப்பினரும் வந்து செல்வதால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், பங்களாக்கள் உள்ளன. மேலும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இங்கு நிலங்களை வாங்கியும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் பங்களாக்கள், விடுதிகள் கட்டி வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

இந்தநிலையில் ஏலகிரி மலை அருகே கொட்டையூர் பகுதியில் சென்னை பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. இங்கு பல வருடங்களாக அவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 30-ந்் தேதி இரவு மழை பெய்து கொண்டிருந்தது. ஜெயகிருஷ்ணன் குடும்பத்தினர் பங்களாவில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

இந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஜெயகிருஷ்ணன் பங்களாவிற்குள் நுழைந்து, நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து, இணைப்ைப துண்டித்துள்ளனர். பின்னர் பங்களா வளாகத்தில் இருந்த 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து ஜெயகிருஷ்ணன் ஏலகிரி மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து, சந்தன மரங்களை வெட்டிக் கடத்தி சென்ற மர்மநபர்களை செய்து தேடி வருகின்றார்.

மேலும் செய்திகள்