மெக்கானிக் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

திண்டிவனம் அருகே மெக்கானிக் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-09-10 17:33 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் சின்னசாமி(வயது 36). மெக்கானிக். இவரது மனைவி ரேவதி(29). கர்ப்பிணியான ரேவதி மதுராந்தகம் தாலுகா முதுகரை கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். 
இதற்கிடையில் நேற்று முன்தினம் சின்னசாமி வீட்டை பூட்டிவிட்டு, திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று மதியம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். 

நகை-பணம் கொள்ளை 

படுக்கை அறை பீரோவும் உடைக்கப்பட்டு துணிமணிகள், பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. 
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் மற்றும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் குழுவினர் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்