மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 519 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-09-11 13:39 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 519 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தலீலா தலைமை தாங்கினார். முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி மகேஸ்வரி பானுரேகா, மக்கள் நீதிமன்ற நீதிபதி அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட 6,737 வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ரூ.17½ கோடி இழப்பீடு

அவற்றில் 3,058 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ.17 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 519 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா தட்டப்பாறை பகுதியில் கடந்த 1989-ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக சுமார் 3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய தொகை வழங்கவில்லை என்று அதன் உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 அதில், தீர்வு காணப்பட்டு 6 பேருக்கு ரூ.1 கோடியே 96 லட்சத்து 15 ஆயிரத்து 980-க்கான காசோலை வழங்கப்பட்டது. அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்த தேவேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கில் இழப்பீடாக ரூ.12 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீராம், சூப்பிரண்டு கேசவன், நிலஆர்ஜித அரசு வக்கீல் உமாசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 இதற்கான ஏற்பாட்டை வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.

மேலும் செய்திகள்