தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

வேடசந்தூர் அருகே தடுப்புசுவரில் மோதி தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-09-11 16:01 GMT
வேடசந்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை இந்திராநகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2 நாட்கள் விடுமுறை என்பதால், சேலத்தில் இருந்து தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உள்ள பெற்றோரை பார்க்க நேற்று காலை விக்னேஷ் காரில் புறப்பட்டார். 

காரை அவரே ஓட்டினார்.கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூரை அடுத்த லட்சுமணம்பட்டி அருகே நேற்று மதியம் கார் சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புசுவரில் மோதியது. பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் அந்த கார், சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

 காரில் இடிபாடுகளில் சிக்கிய விக்னேசை அவர்கள் மீட்டனர். ஆனால் எந்தவிதமான காயமும் இன்றி விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கார் கவிழ்ந்தபோது அந்த சாலையில் வேறு எந்த வாகனமும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்