மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க கோரி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம்

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க கோரி சி.ஐ.டி.யு.வினர் போராட்டத்தில் ஈடுழுட்டனர்.

Update: 2021-09-11 19:04 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்து தரக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பொதுசெயலார் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிர்வாகி அன்புமணவாளன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா கோரிக்கைகள் குறித்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்கினியாறு, வெள்ளாறு ஆகிய இடங்களில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு 11 இடங்களில் மணல் குவாரி அமைத்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
ஆனால் அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல்குவாரி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதன்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்