பா.ஜனதாவில் சேருவதற்கு என்னிடம் பேரம் பேசினர்; ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேருவதற்கு என்னிடம் பேரம் பேசினர் என்று ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

Update: 2021-09-11 21:46 GMT
பெலகாவி: காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேருவதற்கு என்னிடம் பேரம் பேசினர் என்று ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

மந்திரி பதவி கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்திருந்த ஸ்ரீமந்த் பட்டீல், பெலகாவி காகவாட் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி இருந்தார். முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது அவர் மந்திரியாக இருந்தார். ஆனால் பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் ஸ்ரீமந்த் பட்டீலுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக பா.ஜனதா தலைவர்கள் மீது ஸ்ரீமந்த் பட்டீல் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரசில் இருந்து பா.ஜனதாவில் சேர தனக்கு பண ஆசை காட்டியதாகவும், தான் வாங்க மறுத்து விட்டதாகவும் ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து காகவாட்டில் நேற்று ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பேரம் பேசினர்

காங்கிரசில் இருந்து பா.ஜனதாவில் சேருவதற்காக பணம் கொடுப்பதாக கூறினர். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டனர். நான் பணம் எதுவும் வேண்டாம் என்று கூறி விட்டேன். பா.ஜனதாவில் சேர விரும்புவதாக தெரிவித்தேன். ஒரு நல்ல அரசு அமைந்தவுடன், நல்ல பதவியை கொடுக்கும்படி கேட்டேன். பணம் பெற்று பா.ஜனதாவில் சேரவில்லை. நான் பா.ஜனதாவில் சேருவதற்கு என்னிடம் பணம் கொடுப்பதாக பேரம் பேசியது உண்மை தான். மந்திரி பதவி கிடைக்காததால் எந்த அதிருப்தியும் இல்லை.
மந்திரி பதவி விவகாரம் குறித்து மூத்த தலைவர்களுடன் பேசி வருகிறேன். விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும். அப்போது எனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மந்திரி பதவி கொடுப்பதாக மூத்த தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். விரைவில் மந்திரிசபையில் நானும் சேருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்