கொரோனா முதல், 2-வது அலையால் பெரிய பாடம் கற்றுள்ளோம்; பசவராஜ் பொம்மை பேச்சு

கொரோனா முதல்-2-வது அலையால் பெரிய பாடத்தை கற்றுள்ளோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2021-09-12 21:07 GMT
பெங்களூரு:

பொருளாதார பிரச்சினை

  கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் ஜெயநகரில் ஒரு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரி கட்டிட புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

  கர்நாடக அரசு, பெங்களூரு மாநகராட்சி, தனியார் துறை ஆகியவை சேர்ந்து இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தை குழந்தைகள் நல ஆஸ்பத்திரியாக மாற்றி அமைத்துள்ளன. கொரோனாவால் அனைவரும் பொருளாதார பிரச்சினையை அனுபவித்து வருகிறார்கள். மக்கள் தங்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை இழந்துள்ளனர். ஆனால் அதே கொரோனா தான் நம் அனைவரையும் ஒன்றுபடுத்தியுள்ளது.

வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம்

  மனிதநேயம் மிக முக்கியம். பிறருக்காக நமது மனம் கருகவில்லை என்றால் மற்றவர்களுக்கு நாம் பணியாற்றாவிட்டால் இந்த வாழ்க்கை முழுமை பெறாது என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். கொரோனா முதல் மற்றும் 2-வது அலையால் பெரிய பாடத்தை கற்றுள்ளோம். கொரோனா 3-வது அலை வரக்கூடாது. அவ்வாறு வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

  ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை நாம் கொரோனா 2-வது அலையின்போது அறிந்தோம். நாம் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறையும்போது தான் அதன் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது. சமுதாயத்தில் பெற்ற செல்வத்தை இந்த சமுதாயத்திற்கு செலவழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நமது வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் இருக்கும். பெங்களூருவில் சுகாதார சேவைகள் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும். பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் சுலபமாக கிடைக்க வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

மேலும் செய்திகள்