பூந்தமல்லி தனி கிளை சிறையில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய போலீஸ்காரர்

பூந்தமல்லி தனி கிளை சிறையில் பாதுகாப்பு பணியின்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்த இ்ன்ஸ்பெக்டரை, துப்பாக்கியை காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டிய போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-12 23:07 GMT
பூந்தமல்லி, 

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள தனி கிளை சிறையில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறை வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது வழக்கம்.

இந்தநிலையில் கோவிந்தன் என்ற போலீஸ்காரர், தனி கிளை சிறை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அந்தநேரத்தில் கிளை சிறையில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயர், போலீஸ்காரர் கோவிந்தனிடம் பாதுகாப்பு பணியின்போது எதற்காக செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என்றுகேட்டார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் கோவிந்தன், தான் பாதுகாப்பு பணிக்காக வைத்து இருந்த துப்பாக்கியை இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயரை நோக்கி காட்டி சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சகபோலீசார், கோவிந்தனை சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் பூந்தமல்லி தனி கிளை சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போலீஸ்காரர் கோவிந்தனின் மனநிலை குறித்து பரிசோதனை செய்வதற்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்