சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது வழக்கு

Several lakh rupees fraud by conducting chit Case against real estate owner

Update: 2021-09-13 13:13 GMT
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் காஜா. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதோடு மாதச்சீட்டு நடத்தி வந்தார். இவர் சீட்டுத்தொகை முடிந்தவுடன் எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள நிலத்தில் வீட்டுமனை வழங்குவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, அவரிடம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சுகைபு ரகுமான் என்பவர் மாதச்சீட்டில் சேர்ந்து சீட்டுக்கான தொகை செலுத்தி வந்தார். மாதம் ரூ.1,000 வீதம் 30 சீட்டுகள் கட்டி இருந்தார். இந்தநிலையில் சீட்டுக்கான காலகட்டம் முடிந்தபின்னர் காஜா நிலத்தை பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்தார்.
பல லட்சம் ரூபாய் மோசடி
இதேபோன்று தேனி மாவட்டத்தை சேர்ந்த உபயதுல்லா, சிராஜ்தீன், முனியாண்டி, பரக்கத்துல்லா, சலீம்ராஜா உள்பட பலர் சீட்டு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்து இருந்தனர். இதுகுறித்து சுகைபு ரகுமான் மதுரை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து காஜா மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மேலும் சிலரும் இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இந்த சீட்டு நிறுவனம் நடத்த முறையாக அனுமதி பெறவில்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்யலாம்" என்றார்.

மேலும் செய்திகள்