விதைகளின் தரத்தை அறிந்து சாகுபடி செய்வது நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும் என்று கோவை விதைப் பரிசோதனை அலுவலர் வழிகாட்டியுள்ளார்.

விதைகளின் தரத்தை அறிந்து சாகுபடி செய்வது நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும் என்று கோவை விதைப் பரிசோதனை அலுவலர் வழிகாட்டியுள்ளார்.

Update: 2021-09-13 16:10 GMT
போடிப்பட்டி, 
விதைகளின் தரத்தை அறிந்து சாகுபடி செய்வது நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும் என்று கோவை விதைப் பரிசோதனை அலுவலர் வழிகாட்டியுள்ளார்.
தரமான விதைகள்
பிரம்மாண்ட விருட்சமும் மிகச்சிறிய விதையிலிருந்து தான் உருவாகிறது.அதுபோல ஒவ்வொரு பயிரின் விளைச்சலையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக விதை உள்ளது.எனவே விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து விதைக்க வேண்டியது அவசியமாகும்.தற்போது அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விதை உற்பத்தியாளர்கள் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை உறுதி செய்து கொள்வது அவசியமாகிறது. விவசாயிகள் தங்களிடம் இருப்பு வைத்துள்ள விதைகளாக இருந்தாலும், மற்ற விவசாயிகளிடமிருந்து பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும் விதைத் தரத்தை உறுதி செய்துகொள்ள விதைப்பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
விதை பரிசோதனை
இதுகுறித்து கோவை விதை பரிசோதனை அலுவலர் கணேசன் கூறியதாவது'நல்ல தரமான விதைகள் என்பது போதிய அளவு புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் பிற ரக கலவன் இல்லாமல் இருக்க வேண்டும். வயலில் தேவையான அளவில் பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து அதிக மகசூல் பெறுவதற்கு தரமான விதைகளைப் பயன்படுத்துவது அவசியமாகும். விதைகளின் தரத்தை உறுதி செய்வதில் விதைப்பரிசோதனை நிலையங்கள் விதை உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் கைகொடுக்கத் தயாராக உள்ளது. இவர்கள் தங்களிடமுள்ள விதைக் குவியலிலிருந்து சுமார் 250 கிராம் அளவில் விதைகளை எடுத்து, விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து தங்களது விதைகளின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம். இதற்குக் கட்டணமாக ஒரு மாதிரிக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
முளைப்புத்திறன்
தங்கள் விதைகளின் தர முடிவை 5 நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம். இதில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பயறு வகைகள், சூரியகாந்தி, பருத்தி ஆகிய பயிர் விதைகளின் புறத்தூய்மை 98சதவீதமாக  இருக்க வேண்டும். நிலக்கடலையில் புறத்தூய்மை 96 சதவீதமாகவும், எள்ளுக்கு 97 ஆகவும் இருக்க வேண்டும். இதுபோலமக்காச்சோளத்தின் முளைப்புத்திறன் 90 ஆகவும், நெல், எள்ளின் முளைப்புத்திறன் 80 சோளம், கம்பு, துவரை, உளுந்து, பயறு வகைகள், பருத்தி ஆகியவற்றின் முளைப்புத்திறன் 75 மற்றும் நிலக்கடலையின் முளைப்புத்திறன் 70 என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் நெல்லின் ஈரப்பதம் 13,சோளம், கம்பு, மக்காச்சோளத்துக்கு 12, பருத்திக்கு 10, துவரை, உளுந்து, பயறு வகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியவற்றுக்கு 9 என்ற அளவிலும் ஈரப்பதம் இருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கோவை தடாகம் சாலையிலுள்ள விதை பரிசோதனை நிலையத்தை 0422-2981330 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.'என்று அவர் கூறினார். இதுபோல உடுமலை வேளாண்மை அலுவலகத்தில் இருப்பு வைத்துள்ள விதைகளின் முளைப்புத்திறனை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்