விதவைப்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் விதவைப்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-13 19:59 GMT
களக்காடு:
களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் விதவைப்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் புகார்

நெல்லை மாவட்டம் களக்காடு நகரத்தெருவை சேர்ந்தவர் மேகலா (வயது 59). இவரது கணவர் சுதாகர் கடந்த 2009-ம் ஆண்டு உடல்நலக் குறைவாலும், அவரது மகன் கடந்த 2017-ம் ஆண்டு விபத்திலும் இறந்தனர். எனவே, மேகலா தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் களக்காடு அருகே சிதம்பரபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலங்களை சிலர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து, அபகரிக்க முயற்சி செய்து வருவதாக மேகலா நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் மற்றும் பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்துள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று வந்த மேகலா, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார். அதன்பின்னர் திடீரென அவர் தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்ட சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்