கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு

குலசேகரன்பட்டினத்தில் கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

Update: 2021-09-14 14:50 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள மாதவன்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெயராகவன். இவரது மூத்த மகன் மயிலேறும் வேலவன் (வயது 33). அவரது குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு தோட்டத்தில் வேலை செய்வது வழக்கம். 
இந்நிலையில் கடந்த 12-ம்தேதி தோட்டத்தில் வேலை செய்து விட்டு கிணறு அருகேயுள்ள திண்டில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த தாய் சுனேந்திரா மகனை வீட்டிற்கு சாப்பிட அழைத்துள்ளார். அப்போது சாப்பிட வீட்டுக்கு வருவதாக கூறியவர் மீண்டும் அதே திண்டில் படுத்து உறங்கியுள்ளார். 
காலை வரை மகன் வராததை கண்டு பதற்றமடைந்த தாய் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது,  அங்கு அவர் இல்லை. சந்தேகம் அடைந்த தாய், கிணற்றை எட்டிப் பார்த்த போது அங்கு மயிலுறும் வேலவன் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து உடலை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தம்பி ஜெயபாரத் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழந்து அவர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்