பெண்ணை கத்தியால் குத்திய கொத்தனார் கைது

பெண்ணை கத்தியால் குத்திய கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-14 15:00 GMT
அல்லிநகரம்:
தேனி கருவேல்நாயக்கன்பட்டி, மீனாட்சி நகரில் வசித்து வருபவர் ஜோதி (வயது 34). இவரது கணவர் கருப்பையா சென்னையில் வேலை பார்த்து வருகிறார். போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் வீரராஜ் என்ற பாண்டி (வயது 28). கொத்தனாராக உள்ளார். கடந்த 8-ந்்தேதி மாலை இவர் ஜோதியின் வீட்டுக்கு சென்று நான் உங்கள் வீட்டில் கொத்தனார் வேலை பார்த்தேன் என்றும், பக்கத்து ஊரில் வேலைக்கு வந்ததாகவும், சாப்பிட சாப்பாடு தாருங்கள் என்றும் கூறியுள்ளார். 
இதையடுத்து ஜோதி அவரை வீட்டின் முன் அறையில் உட்கார வைத்துவிட்டு, சமையலறைக்கு சென்றார். அப்போது அவர் பின்தொடர்ந்து சென்று திடீரென ஜோதியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் காயம் அடைந்த ஜோதி தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாகியா வழக்குப்பதிவு செய்து, பாண்டியை கைது செய்தார். மேலும் அவர் ஏன் ஜோதியை கத்தியால் குத்தினார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்