தொழிலாளி அடித்துக்கொலை

காளையார்கோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-14 18:17 GMT
காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெற்கு காவனூரைச் சேர்ந்தவர்கள் பாண்டி மகன் கோவிந்தராஜ் (வயது 32) மற்றும் வேலு மகன் பாக்கியராஜ் (42). இவர்கள் இருவரும் உறவினர்கள்.இருவரும் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள போர்வெல் போடும் நிறுவனத்தில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் தங்கி பணியாற்றினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறையில் தங்கி இருந்த போது குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ், பாக்கியராஜை தாக்கியுள்ளார். பிறகு இருவரும் தூங்க சென்று விட்டனர்.

அடித்துக்கொலை

நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த பாக்கியராஜ், இரும்பு குழாயை எடுத்து கோவிந்தராஜை அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் பாக்கியராஜ் வெளியே சென்று தூங்கி விட்டார். நேற்று காலை வேலைக்கு சென்ற சக தொழிலாளர்கள் கோவிந்தராஜ் வராததை அறிந்து அவரை தேடி சென்றனர். அவர் அறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் பாக்கியராஜ் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்