முன்விரோதத்தில் பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை
செங்கம் அருகே முன்விரோதத்தில் பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்
செங்கம் அருகே முன்விரோதத்தில் பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24), ஓசூரில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும், புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். உண்ணாமலைபாளையம் அருகே நடந்து சென்ற வெங்கடேசனை வழிமறித்த சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முன்விரோதம் காரணமாக வெங்கடேசனை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மதி (33), சுரேஷ் (30), வல்லரசு (26), ஏழுமலை (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் புதுப்பாளையம் நகரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.