நடிகரின் பண்ணை தோட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மைசூருவில், நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுதொடர்பாக குதிரை பராமரிப்பாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Update: 2021-09-18 21:31 GMT
மைசூரு:

பண்ணை தோட்டம்

மைசூரு டவுன் டி.நரசிப்புரா சாலையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான ஒரு பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு நடிகர் தர்ஷன் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். மேலும் ஓய்வு நேரத்தில் அந்த பண்ணை தோட்டத்திற்கு சென்று குதிரை சவாரி செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பண்ணை தோட்டத்தை பராமரிப்பதற்காகவும், குதிரைகளை கவனித்துக் கொள்வதற்காகவும் அங்கு ஏராளமான தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். 

அதேபோல் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்த பண்ணை தோட்டத்தில் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தற்போது அவளுக்கு சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் கிடைக்காததால் அவள் பள்ளிக்கு செல்லாமல் தனது பெற்றோருடனேயே வசித்து வருகிறாள். 

குதிரை பராமரிப்பாளர்

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பண்ணை தோட்ட வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, அங்கு குதிரை பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசீம் என்பவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் நடந்த சம்பவங்களை வெளியில் சொல்லக்கூடாது எனக்கூறி அவர் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் இதுபற்றி மைசூரு டவுனில் உள்ள மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் நசீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நசீம் கடந்த 15-ந் தேதியே சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தாமதமாக இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்