பிரதமரை பற்றி விமர்சனம்: பா.ஜனதா கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகை-சேலத்தில் பரபரப்பு

பிரதமரை பற்றி விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-09-19 22:27 GMT
சேலம்:
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் விசாரணை மன்றம்- மோடி அரசின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அக்கட்சியை சேர்ந்த சிலர், பிரதமர் மோடியை பற்றி விமர்சனம் செய்து பேசியதாகவும், அங்கு குற்றவாளி கூண்டில் பிரதமர் நின்றுவாறு அவரிடம் கேள்விகள் கேட்பது போலவும் சித்தரித்து நிகழ்ச்சியை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர் நேற்று இரவு புதிய பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் பிரதமரை பற்றி விமர்சனம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். 
இதைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியினர், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் நிகழ்ச்சியை நடத்தி பிரதமர் மோடியை பற்றி எப்படி பேசலாம்? என்றும், அதுபோன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் போலீசாரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சட்டப்படி புகார் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்து பா.ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரதமரை பற்றி விமர்சனம் செய்ததால் பா.ஜனதா கட்சியினர் ஆவேசம் அடைந்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தை இரவில் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்