10 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 10 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2021-09-23 21:09 GMT
திண்டுக்கல்: 
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக இருக்கும் 28 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில் 22 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 64 பேரும், 4 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 21 பேரும், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 23 பேரும் என மொத்தம் 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். 

இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது முறையான ஆவணங்கள் இணைக்காத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்படி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்களில் 4-ம், ஊராட்சி தலைவருக்கான வேட்புமனுக்களில் 3-ம், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேட்புமனுக்களில் 3-ம் என மொத்தம் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இதனால் மீதமுள்ள 98 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு செய்து உள்ளனர். இதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். 

மேலும் செய்திகள்