பெருங்களத்தூர் அருகே வீட்டு வளாகத்தில் புகுந்த முதலையால் பரபரப்பு

பெருங்களத்தூர் அருகே வீட்டு வளாகத்தில் புகுந்த முதலையால் பரபரப்பு.

Update: 2021-09-26 09:21 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகே வசித்து வருபவர் விஜயகுமார். இவரது வீட்டு வளாகத்தில் நேற்று காலை இவரது மகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டு வாசலில் முதலை இருப்பதாக கூறி திடீரென சிறுவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

வீட்டில் இருந்த விஜயகுமார் வெளியே வந்து பார்த்தார். அவரது வீட்டின் வெளியே சுமார் 2 அடி நீளமுள்ள முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த முதலையை லாவகமாக பிடித்து கயிறால் கட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சதானந்தபுரம் ஏரியில் அதிக அளவு முதலைகள் இருப்பதால் அங்கிருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் தாங்கள் அச்சத்துடன் வசித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் ஏரியில் உள்ள முதலைகளை பிடித்து செல்லவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்