சாலைதடுப்பில் இருசக்கர வாகனம் மோதி அரசுப்பள்ளி ஆசிரியை பலி

அருப்புக்கோட்டையில் சாலைதடுப்பில் இருசக்கர வாகனம் மோதி அரசுப்பள்ளி ஆசிரியை பலியானார்.

Update: 2021-09-27 19:32 GMT
அருப்புக்கோட்டை, 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் சஞ்சீவிநாதன். இவருடைய மனைவி அங்கயற்கண்ணி (வயது 51). தூத்துக்குடி மாவட்டம் மெட்டில்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அங்கயற்கண்ணி கல்குறிச்சியிலிருந்து தினமும் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை வழியாக மெட்டில்பட்டிக்கு பணிக்கு சென்று வருவது வழக்கம். 
இந்தநிலையில் நேற்று அவர் பணிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் குறுக்கே உள்ள தடுப்புச்சுவரில் மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் அங்கயற்கண்ணியின் உடலை பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்