கூவம் ஆற்றை ஒட்டி வீட்டு வசதி வாரியம் கட்டிடம் கட்ட தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கூவம் ஆற்றை ஒட்டி வீட்டு வசதி வாரியம் கட்டிடம் கட்ட தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

Update: 2021-09-28 08:50 GMT
சென்னை,

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கூவம் ஆற்றை ஒட்டி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கூவம் ஆற்றில் தண்ணீர் செல்லும் பாதையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. கூவம் ஆற்றில் தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்படுவதால் இதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த நிபுணர் குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கூவம் ஆற்றில் தண்ணீர் செல்லும் பாதையில் வீட்டு வசதி வாரியம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, கட்டுமானத்தை பொறுத்தமட்டில் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறாத வகையில் தற்போதைய நிலை தொடர வேண்டும். வருவாய் ஆவணங்கள் அடிப்படையில் கூவம் ஆற்றின் எல்லை அளவிடப்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக நிபுணர் குழு தனது அறிக்கையில் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, இதுகுறித்து அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்