குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

Update: 2021-09-28 09:38 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி, அருந்ததி நகரில் கோவிந்தபுரம், செங்கன் தெரு, கந்தன் தெரு, வீரராகவன் தெரு உள்ளிட்ட 16 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

நேற்று காலையும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் திரு.வி.க.நகர் குடிநீர் வாரிய பகுதி என்ஜினீயர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்துக்கு வந்து இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்