பஸ் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்

மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதிய விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி ஊழியர் பலியானார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-28 09:48 GMT
திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவர், சென்னை மாநகராட்சி குப்பை லாரிகள் பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராயபுரம் சிமெண்ட்ரி சாலை ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு ஆஸ்பத்திரி அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவான்மியூரில் இருந்து டோல்கேட் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 6டி) இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஆகாஷ், மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், சம்பவ இடத்துக்கு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது ஆகாஷின் உறவினர்கள் கூறும்போது, “ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு ஆஸ்பத்திரி சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக கார்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்து இருப்பதால் சாலை குறுகலாக உள்ளது. இதனாலேயே விபத்துகள் ஏற்படுவதாக” குற்றம் சாட்டினர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதுபற்றி காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பஸ் டிரைவர் பாக்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்