தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

கரூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-01 18:50 GMT
வெள்ளியணை
5½ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
கரூர் அருகே உள்ள எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 43). இத்தம்பதி தங்களின் ஒரே மகள் கீர்த்தனாவை உப்பிடமங்கலம் அருகே உள்ள வையாபுரி கவுண்டனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பரமேஸ்வரி கடந்த சில நாட்களாக வையாபுரி கவுண்டனூரிலுள்ள மகள் கீர்த்தனா வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிலுள்ள அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமி பரமேஸ்வரி கழுத்தில் இருந்த 5½ பவுன் தங்கதாலிச்சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
 தூக்கம் கலைந்து தனது கழுத்தில் பார்த்த போது தங்க தாலி செயினை காணமல் போனது தெரிந்து பரமேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இதை அங்கிருந்த உறவினர்களிடம் தெரியப்படுத்தியதின் பேரில் அவர்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்