விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

Update: 2021-10-02 16:57 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. 

கன மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலுக்கு செல்லவில்லை

மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மணிக்கு சுமார் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 350 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்