பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து மதுரைக்கு இலவச பஸ் வசதி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு எதிரொலியாக பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து மதுரைக்கு இலவச பஸ் வசதி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.1,500 சேமிக்க முடியும் என பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.;
மதுரை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு எதிரொலியாக பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து மதுரைக்கு இலவச பஸ் வசதி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.1,500 சேமிக்க முடியும் என பெண்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
கிராம சபை கூட்டம்
தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. அவர்கள் ஒரு நாளைக்கு போக்குவரத்துக்கு ரூ.50 வரை செலவழித்தனர். இலவச பஸ் பயண திட்டத்தால் அவர்களுக்கு அந்த பணம் சேமிப்பானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை பாப்பாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், உங்களுக்கு எல்லாம் அரசின் கொரோனா நிதி ரூ.4 ஆயிரம் கிடைத்ததா? என்று கேட்டார். அதற்கு பொதுமக்கள் எங்களுக்கு கொரோனா நிதி கிடைத்தது, மிக்க நன்றி என்றனர். அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பெண்கள் உசிலம்பட்டிக்கு இலவசமாக செல்கிறோம். பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கும் இலவச பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனே முதல்-அமைச்சர், பெண்கள் இனி பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு இலவசமாக அரசு பஸ்களில் செல்லலாம் என்றார். அதன்பின் இது குறித்து அதிகாரிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
உடனடி நடவடிக்கை
முதல்-அமைச்சரின் இந்த உத்தரவை தொடர்ந்து உடனடியாக பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு, பெண்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் திருவம்பலம் பிள்ளை, பொது மேலாளர் இளங்கோவன் ஆகியோர் கூறியதாவது:-
பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து உசிலம்பட்டி மற்றும் பெரியார் பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் செல்கிறது. அதில் உசிலம்பட்டிக்கு 13 பஸ்கள் மொத்தம் 28 நடைகள் செல்கிறது. அந்த பஸ்கள் அனைத்தும் சாதாரண கட்டண பஸ்கள். எனவே அதில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்து வந்தனர். அதே போல் பெரியார் பஸ் நிலையத்திற்கு 3 பஸ்கள் 10 நடைகள் செல்கிறது. அதில் ஒரு பஸ் மட்டும் தான் சாதாரண கட்டண பேருந்து. எனவே அதில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வந்தனர். முதல்-அமைச்சர் உத்தரவைத்தொடர்ந்து உடனடியாக பாப்பாபட்டியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு விட்டன. பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.1,500 சேமிப்பு
இது குறித்து பாப்பாபட்டி கிராம பெண்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு ரூ.29 கட்டணம் செலுத்தி வந்தோம். ஒருவர் மதுரைக்கு சென்று வர பஸ் கட்டணம் மட்டும் ரூ.58 செலவானது. ஆனால் கிராமசபை கூட்டத்தில் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இப்போது எங்கள் கிராமத்தில் இருந்து மதுரைக்கு பெண்கள் இலவசமாக பஸ் பயணம் செய்ய முடிகிறது. அதனால் எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு தினமும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது ரூ.1,500 வரை சேமிக்க முடியும். எங்கள் வாழ்வாதாரம் செழிக்கும். அதுமட்டுமல்ல அனைத்து பஸ்களும் சாதாரண கட்டணமாக மாற்றப்பட்டு உள்ளதால் தற்போது அதன் கட்டணம் ரூ.19 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதில் பயணம் செய்யும் ஆண்களும் இனி குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம். அவர்களுக்கும் பணம் சேமிக்கப்படுகிறது. எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தந்த முதல்-அமைச்சருக்கு எங்களது கிராமம் சார்பில் மனமார நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.