பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது வாலிபர் கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2021-10-07 02:16 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லி ஸ்ரீநகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெனிஸ் (வயது 35). தற்போது இவர், ஆமதாபாத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக சரண்யா, கணவரை விட்டு பிரிந்து மகனுடன், தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதுபற்றி பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக போலீசார் கணவன்-மனைவி இருவரையும் போலீ்ஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர்.அதன்படி இன்ஸ்பெக்டர் தனம்மாள், கணவன்-மனைவி இருவரிடமும் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த ரெனிஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வலியால் துடித்த ரெனிசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்