ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-11 20:08 GMT
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மாணவர்கள் 
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே ஆலத்தூர் முசிறி பகுதியை சேர்ந்தவர்  பழனிவேல். இவருடைய மகன் சிவசக்தி (வயது14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் கமலேஷ் (11). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். 
நேற்றுமுன்தினம் மாலை 3 மணியளவில் சிவசக்தியும், கமலேசும்   முசிறி ஏரி அருகே உள்ள நாவல் மரத்தில் பழம் பறிக்க சென்றனர்.   மரத்தில் பழம் பறித்த அவர்கள் அருகில் இருந்த முசிறி ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது இருவரும் ஏரியில் மூழ்கினர். 
தேடும் பணி
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து   ஏரியில் இறங்கி சிவசக்தி, கமலேஷ் ஆகிய இருவரையும் ேடினர். ஆனால்  2 பேரையும் மீட்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் 
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஏரியில் இறங்கி மாணவர்கள் 2 பேரையும் தேடினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இரவு முழுவதும் தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை. 
உடல்கள் மீட்பு 
இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் ஏரியில் இருந்து சிவசக்தி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து காலை 10.30 மணியளவில் கமலேசின் உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இது குறித்து  மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் மதுக்கூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்