இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிக்கமகளூருவை சேர்ந்த 3 வயது சிறுமி

நகரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களை கூறி அசத்தும் சிக்கமகளூருவை சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Update: 2021-10-11 21:14 GMT
சிக்கமகளூரு:

3 வயது சிறுமி

  சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் பனகல் கிராமம் உள்ளது. அங்கு சாஸ்வத் மற்றும் சுமிதா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆர்வி என்ற 3 வயது மகள் இருக்கிறாள். சிறு வயது முதலே சிறுமி ஆர்வி அனைவரது பெயர்களையும் எளிதாக நினைவில் வைத்திருப்பாள். மேலும், பல்வேறு ஊர் பெயர்களையும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து அதை பெற்றோரிடம் தெரிவிப்பாள்.

  சிறுமி ஆர்விக்கு அபூர்வமான நினைவாற்றல் இருப்பதை அறிந்த அவளது பெற்றோர் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்டு’ என்ற புத்தகத்தில் அவளது நினைவாற்றல் சாதனையை பதிவு செய்ய ஆர்வம் கொண்டனர். அதனால், அந்த நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் ஆர்வியின் பெற்றோர் விண்ணப்பித்தனர்.

சாதனை

  3 வயதே ஆன சிறுமி ஆர்வியின் நினைவாற்றலை சோதிக்க இந்தியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் ஆன்-லைன் மூலம் சோதனை நடத்தியது. அதில், சிறுமி ஆர்வி கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்திய நகரங்களின் பெயர்கள், கன்னடம் மற்றும் ஆங்கில மாதங்கள், நாட்கள், நிறங்கள், பறவைகள், விலங்குகள், காய்கறிகள் ஆகியவற்றின் பெயர்களை தெளிவாக சொல்லி அசத்தி இருக்கிறாள்.

  அதுமட்டுமல்லாமல், பல்வேறு விலங்குகளின் குரல்களை ‘மிமிக்ரி’ செய்தும் அசத்தி இருக்கிறாள். 3 வயதே ஆன நிலையில் சிறுமி ஆர்வியின் நினைவாற்றல் அசாத்தியமாக இருப்பதால் அவளது சாதனை ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் சாதனைக்காக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்