நத்தம் தாசில்தார் அலுவலகம் முன்பு இலங்கை அகதி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நத்தம் தாசில்தார் அலுவலகம் முன்பு இலங்கை அகதி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2021-10-12 15:23 GMT

செந்துறை:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துபட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் மனோரஞ்சிதம் (வயது 60). இவரது பெயரில் நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில் நிலம் உள்ளது. 
இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் செய்தும் வருவாய்த்துறையினர் நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த மனோரஞ்சிதம் தனது மகள் மணிமாலா(38), மருமகன் ஆதித்தன்(42), பேரன் சுமித்ரன்(4) ஆகியோருடன் நேற்று மாலை நத்தம் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார். 
பின்னர் தாசில்தார் அலுவலகம் முன்பு மனோரஞ்சிதம், கேனில் கொண்டு வந்து இருந்த டீசலை தனது மீதும், மகள், மருமகன், பேரன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மனோரஞ்சிதத்தின் கையில் இருந்த டீசல் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்