காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்க 2 வது நாளாக தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-14 05:24 GMT
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக கர்நாடக- தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
பரிசல் இயக்க தடை
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடித்து வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்