அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் சாவு

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-10-15 19:24 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூலித்தொழிலாளி

பாளையங்கோட்டை மேல பாலாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 57), கூலித்தொழிலாளி. 

இவருடைய மனைவி மாரியம்மாள் (42). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாரியம்மாள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிச்சையா, மாரியம்மாளிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே பிச்சையா தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா விசாரணை நடத்தி பிச்சையா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பிச்சையா அவரை அரிவாளால் வெட்டியதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சாவு

இந்த நிலையில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்