6½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

6½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-16 20:32 GMT
செம்பட்டு:

சோதனை செய்ய காத்திருந்த அதிகாரிகள்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்பவர்கள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டும் கடத்தலை தடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதற்கிடையே அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த விமானத்தில் வரும் பயணிகளை சோதனை செய்வதற்காக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் இரவு 7 மணி முதல் காத்திருந்தனர். அந்த விமானம் இரவு 8.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.
6½ கிலோ தங்கம் பறிமுதல்
இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த பயணிகளான நாகப்பட்டினத்தை சேர்ந்த அமுதா(வயது 27), அரியலூரை சேர்ந்த சித்ரா(27), சிவகங்கையை சேர்ந்த முருகையன்(36), கும்பகோணத்தை சேர்ந்த அப்துல்அஜீஸ்(37) மற்றும் இமாம் அலி(32) ஆகியோர் தங்கள் உடமைகளில் மறைத்து, தங்கம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 6.650 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.3.3 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்