பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பிச்சைக்காரர் மாற்றித்தர கோரிக்கை மனு

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தர கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பிச்சைக்காரர் கோரிக்கை மனு கொடுத்தார்.

Update: 2021-10-18 17:25 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சின்னகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 65). பிச்சைக்காரர். இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- சின்னகவுண்டனூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகிறேன். எனக்கு 5 வயதிலேயே கண்பார்வை பறிபோய்விட்டது. அதன்பின், வாழ வழியின்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தேன். அவ்வாறு பிச்சை எடுத்த ரூ.65 ஆயிரத்தை நான் சேமித்து வைத்திருந்தேன். எனக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் நான் பிச்சை எடுத்து வைத்திருந்த பணத்தை எங்கு வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் வைத்திருந்த பணத்தை மீட்டேன். அந்த பணத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் காட்டியபோது, இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாது என்று கூறினார்கள். மேலும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட விவரம் எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே ஆதரவு இல்லாமல் வாழ்ந்து வரும் எனக்கு நான் சேமித்து வைத்த பணம் உதவும் என்கிற நம்பிக்கை இருந்தது. தற்போது என்ன செய்வது என்று அறியாமல் உள்ளேன். கண்பார்வையில்லாமல், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய்கள் வழங்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்