தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் குடியேறும் போராட்டம்

வெம்பக்கோட்டை அருகே நடைபாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-20 18:35 GMT
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை அருகே நடைபாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
வெம்பக்கோட்டை தாலுகா டி.கரிசல்குளம் ஊராட்சி டி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மாலை 3 மணி அளவில் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென தரையில் அங்கு அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ், சாத்தூர் துைண போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
அனுமதி கிடையாது
அப்போது அவர்களிடம் இதுவரை நீங்கள் பட்டா இடத்தில் நடைபாதையாக பயன்படுத்துகிறீர்கள். பட்டா இடத்தை நடை பாதையாக பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அதனால் தற்போது பயன்படுத்தப்படும் நடைபாதையை பட்டாவாக வழங்க இயலாது. உங்களுக்கு புறம்போக்கு இடம் நடைபாத ஒதுக்கி தரப்படும். அந்த இடத்தை நீங்க நடைபாதையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினர். அதனை ஏற்காமல் இரவு தங்குவதற்கு வசதியாக சமையல் பாத்திரங்களுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் பஸ் நிறுத்தம், காட்டுநாயக்கன் தெரு, சம்பந்தப்பட்ட பட்டா நிலம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு‌ போடப்பட்டது. 
மேலும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தொடர்ந்து நடந்து நடத்திய பேச்சுவார்த்தையில் போராட்டத்தை கைவிடுமாறும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்