அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்

தொடர் மழை எதிரொலியாக அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-10-20 20:34 GMT
அதிராம்பட்டினம்;
தொடர் மழை எதிரொலியாக அதிராம்பட்டினத்தில், உப்பு உற்பத்தி  நிறுத்தப்பட்டு உள்ளது.
மழைநீர் தேக்கம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. 
சாப்பாடு உப்பு, கெமிக்கல் உப்பு என வெவ்வேறு ரக உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அதிராம்பட்டினம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதன் காரணமாக உப்பள பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சேமித்து வைத்துள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். இந்த பகுதியில் வழக்கமாக அக்டோபர் மாத கடைசியில் உப்பு உற்பத்தி நிறைவடையும். 
வேலை இழப்பு
ஆனால் தற்போது தொடர் மழை எதிரொலியாக இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணிகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபற்றி உப்பள தொழிலாளர்கள் கூறுகையில் வாரப்பட்ட உப்பை மட்டும் பாதுகாத்து வருகிறோம். மேற்கொண்டு உப்பு உற்பத்தி பணிகளை தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும்போது தான் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கும் என்றனர். 

மேலும் செய்திகள்