தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-10-22 17:40 GMT
கடலூர், 

பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 59), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 47 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். கடந்த 22.10.2017 அன்று அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட ரங்கநாதன், அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அறிந்த பெண்ணின் உறவினர், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்தனர்.

சாகும் வரை சிறை

மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா நீதிமன்றத்தில்       வழக்கு    தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில், ரங்கநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அபராத தொகையில் இருந்து ரூ.25 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்