நடிகை அனன்யா பாண்டேயிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் நடிகை அனன்யா பாண்டேயிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை நடந்தது.

Update: 2021-10-22 20:38 GMT
கோப்பு படம்
மும்பை, 

சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் நடிகை அனன்யா பாண்டேயிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை நடந்தது. 

 வாட்ஸ்-அப் உரையாடல்

மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) கைது செய்யப்பட்டார். 

இந்தநிலையில் ஆர்யன் கான், இளம் இந்தி நடிகை அனன்யா பாண்டே போதைப்பொருள் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டிற்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின், லேப்-டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் அவரை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர். அதன்படி அவர் நேற்று முன்தினம் போதைப்பொருள் அலுவலகத்திற்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். 

 மீண்டும் விசாரணை 

இந்தநிலையில் நேற்று மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி நேற்று மதியம் 2.20 மணி அளவில் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தனது தந்தையுடன், நடிகை அனன்யா பாண்டே வந்து விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் நடிகையிடம் விசாணை நடத்தப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். 

விசாரணை குறித்த எந்த தகவலையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும் வரும் திங்கட்கிழமை அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது நடிகைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்