ஒடுகத்தூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் எலி மருந்து சாப்பிட்டு தாய் தற்கொலை. தந்தை- மகன் கவலைக்கிடம்

ஒடுகத்தூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் எலி மருந்து சாப்பிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தை, மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-10-26 17:08 GMT
அணைக்கட்டு
 
ஒடுகத்தூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் எலி மருந்து சாப்பிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். தந்தை, மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மகள் சாவு
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பின்னத்துரை தானப்பன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 60). கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (47). இவர்களது மகன் பூவிழி ராஜா, மகள் பிரியங்கா (26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதித்து வந்தது. 

இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த துக்கம் குடும்பத்தினரை வாட்டியது. இதனால் துரைராஜ், சரஸ்வதி மற்றும் மகன் பூவிழிராஜா ஆகியோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

3 பேர் எலிமருந்து சாப்பிட்டனர்

அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர்கள் எங்கள் தற்கொலை முடிவுக்கு யாரும் காரணம் அல்ல எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. இது நாங்கள் சுயநினைவுடன் எடுத்த முடிவு தான். யார் மீதும் சந்தேகப்பட வேண்டாம் என்று கடிதம் எழுதி கையெழுத்து போட்டு வீட்டில் வைத்துள்ளனர்.

பின்னர் 3 பேரும் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து பிஸ்கட்டில் கலந்து சாப்பிட்டு உள்ளனர். இதில் மயங்கி விழுந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட துரைராஜ் பூவிழிராஜா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்