இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது

திருவேங்கடம் அருகே கோஷ்டி மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-29 21:02 GMT
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் கீழதிருவேங்கடம் வடக்கு பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47). இவரது மகன் வெங்கடேஷ் (21). இவர் வீட்டின் அருகில் உள்ள திண்ணையில் அமர்ந்து தனது செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த சண்முகக்கனி மகன் கபில் (20) என்பவர் அவரை மது குடிக்க அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்ததால், அவருடைய செல்போனை பறித்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வெங்கடேஷ் தனது தந்தை கருப்பசாமியிடம் கூறினார். இதையடுத்து கருப்பசாமி, வெங்கடேசை அழைத்துக் கொண்டு சண்முகக்கனி வீட்டுக்கு சென்றார். அப்போது செல்போனை கேட்டு சத்தம் போட்டதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். 
இதுகுறித்து கபில் கொடுத்த புகாரின் பேரில், கருப்பசாமி, அவரது மகன் வெங்கடேஷ், மனைவி வள்ளி, தாயார் கருப்பாயி அம்மாள் ஆகியோர் மீதும், கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில், கபில், அவரது தாயார் ராஜேஸ்வரி, சகோதரர் பொன்கணேஷ் (22), சகோதரி ரம்யா (19) ஆகியோர் மீதும் திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி வழக்குப்பதிவு செய்தார். அதில் கருப்பசாமி, வெங்கடேஷ், கபில், பொன்கணேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது ெசய்தனர். மற்றவர்களை ேதடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்