குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா
கூடலூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கூடலூர் துப்புக்குட்டி பேட்டையில் கல்குவாரி, முத்தமிழ் நகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். துப்புகுட்டி பேட்டையில் இருந்து கல்குவாரி, முத்தமிழ் நகருக்கு தார்சாலை செல்கிறது.
இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மிகவும் சிரமம்
இந்த நிலையில் தற்போது கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த சாலை மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது அந்த வழியாக வரும் வாகனங்கள் மூலம் அவர்கள் மீது சேறு தெளிக்கிறது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதேபோன்று வயதானவர்கள், கர்ப்பிணிகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்ய முடியவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும், குழியுமாக காணப்படும் அந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி இருக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இ்ந்த சாலையில் ஆட்டோ, கார், சரக்கு வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் இயக்கப்படுகிறது. பழுதடைந்த சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிகழ்வுகளும் நடக்கிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.