உள்ளூர் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கக்கோரி, கயத்தாறு சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்

உள்ளூர் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கக்கோரி, கயத்தாறு சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-24 11:59 GMT
கயத்தாறு:
உள்ளூர் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கக்கோரி, கயத்தாறு சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகையிட முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலையில் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக கயத்தாறு பஜாரில் கார், வேன், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
48 பேர் கைது 
உடனே கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, தாசில்தார் பேச்சிமுத்து மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற 9 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
உரிய நடவடிக்கை
பின்னர் போராட்டக்குழு பிரதிநிதிகளை கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்