திருவாரூரில் மனைவியை தாக்கிய போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு

திருவாரூரில் மனைவியை தாக்கிய போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-11-24 13:52 GMT
திருவாரூர்:-

திருவாரூரில் மனைவியை தாக்கிய போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் ஏட்டு

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே உள்ள கவுஜியா நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 40). இவருடைய மனைவி குடியா(35). பால்ராஜ் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். 
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் குடியாவின் பெற்றோர் இருவரிடமும் சமாதானம் பேசி வைத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

மனைவியை தாக்கினார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து குடியாவின் தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த குடியா சத்தம் போட்டு மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று குடியாவை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வழக்குப்பதிவு

இதுகுறித்து குடியா திருவாரூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஏட்டு பால்ராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை கொடூரமாக தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
இதேபோல் ஏட்டு பால்ராஜ் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவருடைய மனைவி குடியா உள்பட 4 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்