ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ஆடுகள் திருட்டு

ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ஆடுகள் திருட்டு

Update: 2021-11-24 19:28 GMT
ஆடுகள் திருட்டு என்பது இன்று, நேற்றல்ல... ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே அரங்கேறிக்கொண்டுதான் இருந்திருக்கின்றன. ஆடுகளையும், மாடுகளையும் வளர்ப்பது எளிதல்ல. பிள்ளைகளை போல அவற்றை கண்ணுக்கு கண்ணாக பார்த்து பராமரிக்க வேண்டும். அவை அபகரிக்கப்படும்போது அதை வளர்த்தவர்கள் உயிரே போய்விட்ட நிலையில் இருப்பார்கள்.
காரில் வந்து திருட்டு
யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் புகுந்து திருடிய காலம் எல்லாம் மாறி போய்விட்டது. இப்போது, பட்டப்பகலில் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் கிராமப்பகுதிகளுக்கு சென்று நோட்டம் விட்டு அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை திருடுகிறார்கள். குறிப்பாக சொகுசு கார்களில் வந்து ஆடுகளை கண் இமைக்கும் நேரத்தில் தூக்கி காருக்குள் போட்டு செல்கிறார்கள்.
விவசாயிகள் கஷ்டப்பட்டு வளர்க்கும் ஆடுகளை ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை கொடுத்து வியாபாரிகள் விலைக்கு வாங்கிச்செல்வார்கள். அவற்றை சந்தையில் கொண்டு சென்று விற்றால் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனையாகும். ஆனால் அவர்களிடம் திருடிச்செல்லும் ஆடுகளை குறைந்த விலைக்கு விற்றுவிடுவர்கள். குறிப்பாக, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபோகும் ஆடுகளை திருடும் கும்பல், அவற்றை வெறும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரைக்கு விற்கின்றனர்.
வலையில் சிக்கும் வாலிபர்கள்
இதனால் கறிக்கடைக்காரர்கள் இதுபோன்ற கும்பலை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு அதிக லாபம் பார்க்கிறார்கள். குறிப்பாக, கொரோனா காலத்தில் அதிகரித்த வேலையிழப்பு, படித்து விட்டு வேலை கிடைக்காத நிலையை பயன்படுத்தி வாலிபர்களை மூளைச்சலவை செய்யும் கறிக்கடைக்காரர்கள் சிலர் அவர்களை ஆடு திருடும் தொழிலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
நாள் முழுவதும் வேலை செய்து ஒரு மாதத்தில் கிடைக்கும் சம்பளத்தை 5 ஆடுகளை திருடி விற்று சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுவதால் பல வாலிபர்கள் அவர்களின் வலையில் சிக்கி ஆடு திருடும் தொழிலில் ஈடுபடுகிறாா்கள். அவர்கள் தங்களுக்கு உதவியாக சிறுவர்களை பயன்படுத்த காரணம், அவர்களுக்கு குறைந்த கமிஷன் கொடுத்தால் போதும் என்பது தான்.
ஆடு திருடிய தம்பதிகள்
இது ஒரு புறம் இருக்க ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்னை கொரட்டூரில் ஒரு தம்பதி 6 மாத கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசில் மாட்டிக்கொண்டனர். அதற்கு முன்பு சென்னை எண்ணூர் பகுதியில் திருவல்லிக்கேணியில் வசித்துவந்த காதல் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி கண்காணிப்பு கேமராவில் சிக்கியதால் போலீசில் சிக்கினர்.
ஆடு திருட்டு குறித்து பெரும்பாலானோர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுப்பதில்லை. அவ்வாறு புகார் கொடுத்தாலும், அந்த வழக்குகள் பெரும்பாலும் கிடப்பிலேயே கிடக்கும். ஒரு சில சம்பவங்களில் திருடர்கள் பிடிபட்டாலும் போலீஸ் நிலையத்தில் சமாதானம் பேசும் சம்பவங்கள்தான் நிகழ்வதாக கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதிகரிக்கும் வழக்குகள்
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகத்தை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் ஆடு திருடும் கும்பல் அதிகமாக கைவரிசை காட்டிஉள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் ஆடு திருட்டு தொடர்பாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் 49 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 36 வழக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் 17 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 15 வழக்குகளும் ஆடு திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி சரகத்தில் 2019-ம் ஆண்டு 28 வழக்குகள், 2020-ம் ஆண்டு 56 வழக்குகள், 2021-ம் ஆண்டு இதுவரை 101 வழக்குகள் என்று மொத்தம் 185 வழக்குகள் ஆடு திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்டதில் 88 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் சிக்கி உள்ளனர். 97 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, ஆண்டுதோறும் ஆடு திருட்டு சம்பவம் அதிகரிப்பதையே காட்டுகிறது.
இதற்கு ஆடு திருடினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் இல்லாததுதான் இதுபோன்ற திருட்டுகள் அதிகரிக்க காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே திருடர்களுக்கு தண்டனையை கடுமையாக்குவதுடன், காவல் துறையினர் இதுபோன்ற வழக்குகளில் கவனம் செலுத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்