பஸ் மோதி கல்யாண புரோக்கர் பலி

பஸ் மோதி கல்யாண புரோக்கர் பலியானார்

Update: 2021-11-24 19:36 GMT
பெரம்பலூர்
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). கல்யாண புரோக்கர். இவர் நேற்று காலை திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா பச்சை பெருமாள்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரனின் (63) உறவினர் ஒருவருக்கு பெண் பார்ப்பதற்காக, அவருடன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் வந்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் மீண்டும் மதியம் சொந்த ஊர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ரவிச்சந்திரன் ஓட்டினார். பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் களரம்பட்டி அய்யப்பன் கோவில் அருகே சென்ற போது எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது சாலை விரிவாக்கத்திற்காக போடப்பட்டுள்ள ஜல்லிக் கற்களில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில், பின்னால் அமர்ந்திருந்த தியாகராஜன் வலதுபக்கம் சாலையில் கீழே விழுந்தார். அப்போது அரசு பஸ்சின் சக்கரம் தியாகராஜன் தலையில் ஏறியதில், அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்