விவசாயி மர்ம சாவு; 2 ஆடுகளும் செத்தன

விவசாயி மர்மமான முறையில் இறந்தார். அவரது 2 ஆடுகளும் செத்தன.

Update: 2021-11-25 20:12 GMT
செந்துறை:

ஆடு, மாடுகள் மேய்க்க சென்றனர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 48). விவசாயி. இவரது மனைவி பாலாமணி. தியாகராஜன் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் 2 பேரும் செந்துறை செல்லும் சாலையோரம் தங்களது ஆடு மற்றும் மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சாவு
பாலாமணி தனது மாடுகளை சற்று தூரத்தில் மேய்த்து கொண்டிருந்த நிலையில், தியாகராஜன் தனது ஆடுகளுடன் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் சாலையில் இருசக்கர வாகனத்துடன் சட்டை கிழிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் தியாகராஜன் உயிருக்கு போராடியதை கண்டு, உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறிது தூரத்தில் அவருக்கு சொந்தமான 2 ஆடுகளும் செத்து கிடந்தன.
மின்னல் தாக்கியதா?
இது பற்றி தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பாலாமணி மற்றும் தியாகராஜனின் உறவினர்கள் அங்கு ஓடி வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக மின்னல் தாக்கி தியாகராஜன் மற்றும் 2 ஆடுகள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது உடல் கிடந்த விதத்தை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தியாகராஜன் மின்னல் தாக்கியதில் உயிர் இழந்தாரா? அல்லது சாலை விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்