நண்பர்களுடன் சென்றபோது நடுக்கடலில் படகு கவிழ்ந்து 10-ம் வகுப்பு மாணவன் சாவு

நண்பர்களுடன் சென்றபோது நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானான்.

Update: 2021-11-30 09:27 GMT
திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் வள்ளுவர் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மனைவி கலையரசி. இவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சி 2-வது வார்டில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர், இவர்களுடைய மகன் பிரசாந்த் (வயது 15). இவன், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 27-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த பிரசாந்த், நண்பர்களுடன் விளையாட சென்றான். ஆனால் அதன்பிறகு அவன் வீடு திரும்பவில்லை. பணி முடிந்து வீட்டுக்கு வந்த அவனது பெற்றோர், எங்கு தேடியும் மகனை காணாததால் எண்ணூர் போலீசில் மகனை காணவில்லை என புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர்.

சம்பவத்தன்று பிரசாந்துடன் பேசிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்துரு (31), ஐவி (16) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது 27-ந்தேதி பிரசாந்த் உள்பட இவர்கள் 3 பேரும் மீனவர்கள் புயல் மழை காரணமாக கரையில் நிறுத்தி வைத்திருந்த படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றனர். அப்போது பலத்த காற்றுடன் பெய்த மழையால் அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

இதில் பிரசாந்த் நீரில் மூழ்கினார். ஆனால் அவரது நண்பர்கள் 2 பேர் மட்டும் கடலில் நீந்தி கரைக்கு தப்பி வந்துவிட்டனர். இதுபற்றி வீட்டில் தெரிந்தால் திட்டுவார்கள் என பயந்து யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டதும் தெரிய வந்தது.

இதற்கிடையில் நேற்று மீஞ்சூர் அருகே பிரசாந்த் உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த எண்ணூர் போலீசார், அங்கு சென்று மாணவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்