ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
மங்களமேடு:
உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள பெண்ணகோணம் ஊராட்சியில் நேற்று ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள துணைத்தலைவர் செல்வராணி வந்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, துணைத் தலைவர் பதவியில் இருந்து செல்வராணியை நீக்கிவிட்டதாக கூறி, அவருக்குரிய இருக்கையை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்கை கொடுக்கக் கோரியும், துணைத் தலைவர் பதவியை விட்டு நீக்கிய தீர்மானம் செல்லாது என்று கூறியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இரவிலும்...
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி அங்கு வந்து, செல்வராணியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் வரும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக செல்வராணி தெரிவித்தார். இரவிலும் அவரது போராட்டம் நீடித்தது. இதையடுத்து மங்களமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.