சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

Update: 2021-12-06 12:34 GMT
கோவில்பட்டி:
சசிகலா-டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இரட்டை தலைமை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ளோம். இனி அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைதான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு இடமில்லை
சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்து கொள்ளப்படுவார்களா? என்ற கேள்விக்கே இடமில்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தவர்கள், மீண்டும் அ.தி.மு.க.விற்கு வருவது நடக்காத காரியம்.
சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் சிலர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். அ.தி.மு.க.வில் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்ற நிலைப்பாட்டை அவர்களே எடுத்துக் கொண்டனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்.
வன்முறை
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவு தினத்தை துக்க நாளாக அனுசரிக்க வேண்டிய நேரத்தில், வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள்தான், இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுவார்கள். இதில் அ.ம.மு.க.வினர் ஈடுபட்டார்களா?, அல்லது அவர்கள் போர்வையில் வேறு யாரேனும் ஈடுபட்டார்களா? என்பதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்தான் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்