திருவள்ளூர் அருகே மாடு மீது ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு

திருவள்ளூர் அருகே மாடு மீது ஆட்டோ மோதியதில் சாலையோரம் கவிழ்ந்தது.

Update: 2021-12-07 13:59 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் புதிய காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர், கடந்த 4-ந் தேதியன்று தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூரை அடுத்த பண்ணூர் நோக்கி வந்தார்.

அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் வந்ததால் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மாடு மீது மோதியதில் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ராஜ்குமாருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்